நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மருந்து மாத்திரைகளில் அலட்சியம் வேண்டாம்...

மருந்து மாத்திரைகளில் அலட்சியம் வேண்டாம்...

நம்மவர்களுக்கு எல்லாவற்றிலும் அலட்சியம் தான். மனதில் தோன்றியதை செய்து பின் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். மற்ற விடயங்களில் பரவாயில்லை ஆனால் உடல் ஆரோக்கியம் சார்ந்தவற்றில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம் ஆகும்.. 
 
நமக்கு வரும் நோய்களில் இருந்து காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் மருத்துவர் ஆலோசனைப்படி சரியான மருந்தை வாங்கி - நிர்ணயிக்கும் நேரத்தில் சரியான அளவில்-மருத்துவர் குறிப்பிடும் காலம் வரை சாப்பிடவேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் ஆபத்து நமக்குத் தான். 
 
பொதுவாக வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், தூக்கமின்மை போன்றவற்றிற்கு மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துக்கடைகளில் மருந்துகள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இத்தகைய மருந்துகளால் நோய் குறைந்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டாலும், அவர்களது உடல் மெல்ல மெல்ல ஆரோக்கியச் சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும். 
 
மருத்துவரின் பரிந்துரை இல்லாத மருந்துகளைச் சுயமாக வாங்கித் தொடர்ந்து உட்கொண்டால், உடலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். மருத்துவர்கள் நோயின் தன்மை, உடல்நிலை, வயது, ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்ற பலவற்றையும் கேட்டறிந்து சரியான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அதுவே முழுப் பலனைத்தரும். 
 
காய்ச்சலோ, ஜலதோஷமோ ஏற்பட்டால் உங்களுக்கு நன்கு தெரிந்த ‘குடும்ப மருத்துவரிடம்’ சிகிச்சை பெறுவது நல்லது. மருந்து சாப்பிட்ட உடன் நோய் குணமாக வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். 
 
உடனே நோய் குணமாகாத போது, கொடுக்கும் மருந்தின் அளவை அதிகரிக்கலாமா என்றும் சிலர் யோசிக்கிறார்கள். மருத்துவர் குறிப்பிடும் அளவைவிட அதிகமாக மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகாது என்பதை விட, பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கும். பாதுகாப்பான மருந்தாகக் கருதப்படும் பாராசிட்டமாலை கூட அதிகமாக உட்கொண்டுவிட்டால், சிலருக்குப் பாதிப்புகள் உருவாகும். 
 
சிலர் மருத்துவரிடம் செல்வார்கள். மருத்துவர் அவரது நோய்த்தன்மைக்கு ஏற்ப ஒருவாரத்திற்கு மருந்துகள் எழுதிக்கொடுத்து, ‘சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’ என்பார். அவரோ அதே மருந்தைத் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு மருத்துவரிடம் வருவார். இது ஆரோக்கியத்தை மிக மோசமாகப் பாதிக்கும் செயல்முறையாகும். 
 
மருத்துவர் குறிப்பிடும் காலம்வரை மட்டுமே குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே சரியான வழிமுறையாகும். சிலர் முதலில் இரண்டு நாட்கள் ஒரு மருத்துவரிடம் காட்டி, அவர் வழங்கும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவார்கள். மூன்றாம் நாள் இன்னொரு மருத்துவரிடம் செல்வார்கள். 
 
முதலில் வாங்கிய மருந்து சீட்டை காட்டாமலே ஆலோசனை பெற்று, அவர் வழங்கும் மருந்துகளையும் சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்ற, சரியான அணுகு சிகிச்சை பெறவேண்டும். நோய்க்கு மருந்து சாப்பிடும்போது, நோயாளிகளுக்கு உணவு சாப்பிட மனம் இருக்காது. ஆனால் அவர்களுக்குக் கட்டாயம் உணவு தேவை. 
 
அதில் அன்றாடம் உடலுக்குத் தேவையான கலோரியும்,சத்தும் இருக்கவேண்டும். சாப்பிடாவிட்டால், உடல் மேலும் தளர்ந்து போகும். காய்ச்சல் இருக்கும்போது எளிதாக ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ளவேண்டும். குளிர்ந்த, பழகிய உணவுகளைத் தவிர்க்கவேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தால் உப்பு சேர்த்த கஞ்சி, ஓ.ஆர்.எஸ்.திரவம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். 
 
மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளைக் கடையில் வாங்கும்போது சீட்டை வைத்து மருந்துகளைச் சரிபாருங்கள். மருந்தின் காலாவதி மாதத்தைக் கவனியுங்கள். ஒருமுறை வாங்கிப் பயன்படுத்திய பாட்டில் மருந்துகளை, சிலர் ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் நோய் வரும்போதும் கொடுக்கிறார்கள். 
 
அது தவறு. ‘சிரப்’ வடிவில் உள்ள ஆன்டிபயாடிக் மருந்து பாட்டில்களைத் திறந்த சில நாட்களுக்குப் பயன்படுத்தலாம். அதன் பின்பு அதன் சக்தி குறைந்துவிடும். அதனால் திறந்த பாட்டில் மருந்துகளை நோய் தீர்ந்த பின்பு சேமித்து வைக்கவேண்டாம். பாரசிட்டமால், இருமல் சிரப் போன்றவற்றைக் காலாவதி தேதிவரை பயன்படுத்தலாம். 
 
வீடுகளில் மருந்துகளை எப்போதுமே குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். வீட்டில் பெரியவர் ஒருவருக்கும், குழந்தை ஒன்றுக்கும் காய்ச்சல் ஏற்பட்டால் பெரியவர் மருத்துவரைப் பார்த்து வாங்கிய மாத்திரையில் அரை அல்லது கால் பகுதியை குழந்தைக்குக் கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு. 
 
இருமல் சிரப் மற்றும் காய்ச்சலுக்கான சில மருந்துகளைச் சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆன்டி ஹிஸ்டமின் தூக்கத்தை வரவழைக்கும். சோர்வு, உற்சாகக்குறைவு போன்றவையும் தோன்றும். அதனால் அத்தகைய மருந்து, மாத்திரைகள் சாப்பிடும் நாளில் ஓய்வெடுப்பதே நல்லது. 
 
வாகனங்கள் ஓட்டுவதையும் தவிர்க்கவேண்டும். முறையாகப் படித்த மருத்துவரைத் தேர்ந்தெடுப்பது மருந்து, மாத்திரைகளை முறையாக வாங்குவது சாப்பிடுவது போன்ற விஷயங்களில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வு பெறவேண்டும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!