90 வயதில் தனது தொழிலைத் தொடங்கி பிரபல இன்ஸ்டா ஸ்டாரான பாட்டி
- Get link
- X
- Other Apps
ஹர்பஜன் கவுர் என்ற மூதாட்டி தயாரித்த இனிப்பு நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் அவரது உற்சாகமான வீடியோ வைரலாகி வருகிறது. இவருக்கு வயது அதிகமில்லை, வெறும் 95 தான்...
வயது என்பது வெறும் எண்ணிக்கை தான் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். அதை நிரூபிக்கிறார் 95 வயதான ஹர்பஜன் கவுர் என்ற மூதாட்டி. இன்ஸ்டாகிராமில் கலக்கி வரும் இந்த பாட்டி, பலருக்கு உத்வேகம் தரும் பெண்மணியாக மிளிர்கிறார்.
அப்படி என்ன இந்த மூதாட்டி செய்துவிட்டார் என்ற கேள்வி எழுகிறதா? அவர் மிகவும் பெரிய, யாருக்கும் தெரியாத அதி உன்னதமான காரியம் எதையும் செய்துவிடவில்லை.
90 வயதில் தொழில் தொடங்கி கடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக வியாபாரம் செய்து வருவது மிகவும் சாதாரணமான விஷயம் என்று நினைத்தால், 95 மூதாட்டி செய்தது பெரிய சாதனை இல்லை தான்.
ஆனால், தொழில் தொடங்கி நடத்துவது என்பது இளம் வயதிலேயே மிகவும் சிரமமாக இருக்கும் இந்த காலகட்டத்தில், பாட்டியின் அதிரடி தொழில் முயற்சிக்கு கிடைத்த வரவேற்பு அவரை பிரபலமாக்கிவிட்டது.
ஹர்பஜன் கவுர் என்ற மூதாட்டி தயாரித்த இனிப்பு நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் அவரது உற்சாகமான வீடியோ வைரலாகி வருகிறது.
ஏதாவது செய்ய விருப்பம் இருந்தால், முயற்சியும் உழைப்பும் இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் 95 வயதான ஹர்பஜன் கவுரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 90 வயதில் தனது தொழிலை தொடங்கினார். இப்போது அவரது இனிப்புகள் மற்றும் பிற உணவு பொருட்கள் நாடு முழுவதும் பிரபலமாகி வருகின்றன. இந்த வைரல் வீடியோவில் பிறருக்கு ஊக்கமளிக்கும் மூதாட்டியின் தொழில் பயணம் எப்படித் தொடங்கியது தெரியுமா?
90 வயதான பிறகுதான் இதுவரை தான் பணம் எதுவும் சம்பாதிக்கவில்லை என்ற எண்ணம் ஹர்பஜன் கவுருக்கு ஏற்பட்டது. இதைப் பற்றி கவுர் தனது மகளிடம் பேசிக் கொண்டிருந்தார். கடலைமாவில் இனிப்பு செய்வதில் திறமையான ஹர்பஜன் கவுரின் இனிப்புக்கு அவரது குடும்பத்தினர் அடிமை என்றே சொல்லலாம். எனவே கவுரின் மகள், ஏன் இனிப்பு செய்து விற்கக்கூடாது என்று கேட்டப்போது, அது சரியான யோசனையாக இருக்கும் என நினைத்தார் மூதாட்டி கவுர்.
உடனே வீட்டிலேயே கடலை மாவில் அவர் செய்து விற்பனை செய்த இனிப்பு வகைகள் நன்றாக விற்பனையானது, முதல் முறையாக அவர் தனது கடின உழைப்பின் மூலம் 2000 ரூபாய் சம்பாதித்தார். அதன்பிறகு அவருக்கு உத்வேகம் எழுந்தது. இந்த எளிமையான பயணம் இன்று மிகவும் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது.
அதுமட்டுமல்ல, ஹர்பஜன் கவுரின் கதை சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
படிப்படியாக, அவருக்கு இன்ஸ்டாகிராம் (Harbhajan Kaur Instagram) மூலம் ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கியது. இப்போது அவருடைய தனிப்பட்ட இனிப்புகள், சட்னிகள் மற்றும் தின்பண்டங்கள் நாடு முழுவதும் விற்பனையாகிறது. அவரது பேத்தி மூலம் இன்ஸ்டாகிராமில் சூப்பராக தொழில் செய்து வருகிறார் 95 வயது மூதாட்டி.
அவரது ஒவ்வொரு உணவு வீடியோவையும் மில்லியன் கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கின்றனர். Official Humans of Bombay என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் ஹர்பஜன் கவுரின் கதை பகிர்ந்து கொள்ளப்பட்டபோது 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
ஹர்பஜன் கவுருக்கு கொரோனா இரண்டாவது அலையில் கோவிட் தொற்று ஏற்பட்டது. ஆனால் வைரஸும் இந்த மூதாட்டியின் வைராக்கியத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோவிடை வெற்றிக் கொண்ட பிறகு மீண்டும் வழக்கம் போல தனது வியாபாரத்தை தொடர்கிறார் இந்த 95 வயது இளைஞி…
ALSO READ : Be Strong: 22 அடி பாம்பை தோளில் சுமந்து செல்லும் அதிசய மனிதர்!
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment