பூமியின் கீழ், பூமியின் உட்பகுதியில் என்ன இருக்கிறது என்பது குறித்து முதல் முறையாக அதி உயர்தர படங்களை எடுத்துள்ளார்கள் விஞ்ஞானிகள். இது டீப் எர்த் துறையின் புதிய மைல்கள் என்கிறார்கள்.

வானத்தில் ஒரு சில கிலோமீட்டர்களைத் தாண்டிவிட்டால் எப்படி மனிதனுக்கு அது ஒரு பறந்து விரிந்த பிரபஞ்சமாகத் தெரிகிறதோ, அப்படி பூமியின் கீழும் ஒரு சில கிலோமீட்டர்களைத் தாண்டிவிட்டால் ஆச்சர்யங்களை அள்ளித் தெளிக்கும் சுரங்கமாகத் தெரியும்.
மனிதன் பூமியில் சுமார் சில லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறான். ஓரளவுக்கு நவீன அறிவியல் எல்லாம் கை கூடியதாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு 100 ஆண்டுகளைக் குறிப்பிடலாம்.
இந்த நவீனக் காலத்தில் பூமியின் கீழ், பூமியின் உட்பகுதியில் என்ன இருக்கிறது என மனிதன் பல முறை பல படங்களை எடுத்துள்ளான். ஆனால் தற்போது, முதல் முறையாக அதி உயர்தர படங்களை எடுத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.
இந்த கூட்டு ஆய்வு தொடர்பான விவரங்கள் 'தி கோர் மேன்டில் பவுண்டரி' என்கிற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் வரையான பகுதியைப் புவித் தகடு (Earth Crust) என்பர். அதிலிருந்து அடுத்து 2,900 கிலோமீட்டருக்கு மிக கடினமாகவும், உறுதியாகவும் இருக்கும் பகுதி தான் மேன்டில் என்கிறது நேஷனல் ஜியோகிராபிக் வலைத்தளம்.

ஹவாய் தீவுகளின் கீழ் இந்த ஆராய்ச்சிகள் நடந்தன. இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்கிற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் புதிய படமெடுக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அதோடு சுமார் 3,000 கிலோமீட்டருக்குக் கீழ் என்ன இருக்கின்றன என்பது குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட்டன.
நீண்ட காலமாக, விஞ்ஞானிகள் பூமியை ஆராய செஸ்மிக் அதிர்வுகளையே பயன்படுத்தி வந்தனர். அதை வைத்துக் கொண்டு தயாரிக்கப்படும் படங்களில் அத்தனை தெளிவில்லை.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட அணி, தெளிவான படத்தைப் பிடிக்க, அல்ட்ரா லோ வெலாசிட்டி சோன் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து வரும் அதீத ஃபிரீக்வன்சி சிக்னல்களைப் கணக்கில் எடுத்துக் கொண்டு, பல கம்பியூடேஷனல் மாடலை உருவாக்கியது. அதன் விளைவாக அதி உயர் திறன் கொண்ட புவியின் உட்பகுதிப் படம் கிடைத்தது.
"டீப் எர்த் செஸ்மாலஜி துறையில் இது ஒரு மைல் கல் - பூமியின் உட்பாக அமைப்புகளைக் காட்ட, இப்போது முதல் உறுதியான ஆதாரத்தைப் பெற்றிருக்கிறோம்" என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியோஃபிசிசிஸ்ட் சி லி (Zhi Li) கூறியுள்ளார்.
இப்போது விஞ்ஞானிகள் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இரும்பு, நிக்கல் நிறைந்த மையப்பகுதி மற்றும் மேன்டில் பகுதிக்கு இடையில் ஆராய விரும்புகின்றனர்.
இது புவியின் டெக்டானிக் தகடுகள், எரிமலை உருவாக்கம் போன்றவற்றைக் குறித்து ஆராய உதவியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Comments
Post a Comment